ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ஆளு; ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை!

1229

சிட்டிசன் படத்தில் ‘அத்திப்பட்டி’ என்ற ஒரு கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அது சினிமா கதை. ஆனால் நிஜத்திலும் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போகும் விளிம்பில் இருக்கிறது ஒரு கிராமம்.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் என்ற கிராமம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை ஒன்று. மற்றவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்? ஏன் காலி செய்தார்கள்? தனியாக வசிக்கும் அந்த ஒற்றை மனிதர் யார்? கள நிலவரம் அறிய மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்றோம்.

நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. அங்குகூட மக்கள் கணிசமாக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். செக்காரக்குடியில் இருந்து 3 கி.மீ. தூரத்தில், ஆள் அரவமற்ற தனித்த சாலையில் சென்றால் வந்துவிடுகிறது மீனாட்சிபுரம். இதற்கு அடுத்து எந்த ஊருக்கும் செல்வதற்கு பாதை கிடையாது.

நடு மதியம்; உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது; கிராமம் முழுவதும் மயான அமைதி; திரும்பும் திசையெங்கும் கைவிடப்பட்ட வீடுகள்; ஆட்கள் இல்லாததால் வீட்டிற்குள்ளும், வாசலிலும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. பல வீடுகள் அந்தரத்தில் தொங்கி இடியும் நிலையில் உள்ளன; ஒருசில வீடுகள் இடிந்து நொறுங்கிக் கிடக்கின்றன; ஒன்றிரண்டு வீடுகள் கம்பீரமாக வீற்றி நிற்கின்றன.

மக்கள் பொதுவாக பயன்படுத்தி ஒரு பெரிய ஆட்டு உரல் கிராமத்தின் மையப்பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. மழலைக் குழந்தைகள் துள்ளித்திரிந்து கல்விப் பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கால்நடைகள் இளைப்பாறும் இடமாக மாறிப்போயிருக்கிறது; மக்கள் கூடிக் கண்டுகளித்த பொது தொலைக்காட்சி அறை வெறும் அறையாக காட்சியளிக்கிறது.

மொத்ததில் மக்கள் வாழ்ந்த நினைவுகளை அசை போட்டபடி மவுனியாக நிற்கிறது மீனாட்சிபுரம். ஆனாலும் எஞ்சியிருக்கும் ஒரு மனிதருக்காக இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது மீனாட்சிபுரம். கிராமத்தின் கடைசியில் ஒரேயொரு வீடு மட்டும் மனிதர் வசிப்பதற்கான அடையாளங்களை கொண்டு நிற்கிறது. மீனாட்சிபுரம் கிராமம் வரைபடத்தில் இன்னமும் நிலைத்திருப்பதற்கு காரணகர்த்தாதான் அந்த மனிதர். அவர்தான் 70 வயதான கந்தசாமி. பேச்சுக்கொடுத்தோம். கிராமத்தின் நினைவுகளை ஏக்கம் கலந்த புன்முறுவலுடன் பேசத்துவங்கினார்.

‘’சொந்தபந்தங்களோட, சொத்து சுகங்களோட, குழந்தைங்க சிரிப்பு சத்தத்தோட, தினந்தினம் நிறைஞ்ச பண்டிகையோட இருந்த கிராமம்தான் தம்பி இந்த மீனாட்சிபுரம். சுமார் ஐநூறு வருஷமா மக்கள் வாழ்ந்து வந்துருக்காங்க இங்க. என் தாத்தா, அப்பா, நான் எல்லோருமே இந்த கிராமத்துல பிறந்து வளர்ந்தவங்கதான். சுத்தி இருக்கிற ஏழு கிராமங்களுக்கு மீனாட்சிபுரம் தான், தாய் கிராமம். சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்த கிராமம். 5 வருஷத்துக்கு முன்னாடிவரை கூட, இங்க 150 குடும்பங்கள் இருந்தது.

பொங்கல் பண்டிகை சமயம் எங்க கிராமமே களைகட்டும். பானைகள்ல பொங்கலிட்டு, விளையாட்டு போட்டி, ஆட்டம், பாட்டம் கொண்ட்டாட்டம்னு… அந்த மகிழ்ச்சி குரல் இன்னமும் என் காதுகள்ல எதிரொலிக்குது. தீபாவளி பண்டிகைக்கு சொந்தகாரங்க இங்க உள்ளவங்க வீட்டுக்கு வந்து பட்டாசு வெடித்து கொண்டாடிட்டு போவாங்க. சண்டை, சந்தோஷம், துக்கம், விழா காட்சிகள்.. என சகலத்தையும் பார்த்த என் கிராமம், இப்ப தனித்தீவா மாறிக்கிடக்குது.

மக்கள் எல்லோரும் ஊரை காலி பண்ணதுக்கு காரணம் தண்ணீர் பஞ்சமும், வேலைவாய்ப்பு இல்லாததும்தான். எங்க கிராமம் வானம் பார்த்த பூமி. மழையை நம்பிதான் மக்கள் வாழ்ந்து வந்தாங்க. விவசாயத்தையும், குடிநீரையும் மழை தண்ணீர்தான் பூர்த்தி செஞ்சது. மழை பெய்யலனா ஊர் பஞ்சமாயிடும்.
பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மழை ஓரளவு கைகொடுத்து எங்க வாழ்வாதாரம் பரவாயில்லாம இருந்தது. பிறகு ஆண்டுக்கு ஆண்டு மழை கம்மியானது. அதனால விவசாயம் பொய்த்துப் போச்சு. குடிதண்ணீருக்கு அலைஞ்சு திரிஞ்சோம். இங்க இருந்து 5 கி.மீ. நடந்து தண்ணீய சுமந்து கொண்டு வருவோம். பஸ் வசதி கிடையாது.

மக்கள் பஞ்சம், பட்டினின்னு ரொம்பவே கஷ்டப்பட்டுப் போனாங்க. அதுல இருந்து ஒருத்தர் ஒருத்தரா ஊரை காலி பண்ண ஆரம்பிச்சாங்க. சொந்த வீடு வாசல், விவசாய நிலம் எல்லாத்தையும் அப்படி அப்படியே விட்டுட்டு போனவங்கதான். திரும்ப வரவே இல்லை. மழை பெய்ஞ்சு ஊர் செழிப்பானா திரும்ப வந்துரலாம்ன்னு என்ற நம்பிக்கையில் போனவங்ககூட அவங்க நினைச்சது நடக்கவில்லை.

மூணு வருஷத்துக்கு முன்னாடி என்னைத் தவிர எல்லோரும் காலி பண்ணிட்டு போயிட்டாங்க. போனவங்க யாரும் திரும்பி எட்டிகூட பார்க்கல. ஒருசிலர் மட்டும் வாரத்துல இருநாள் இங்க இருக்கிற அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவாங்க.

மக்கள் போன வரைக்கும் அரசாங்கம் குடிதண்ணீர், சாலை வசதி எதுவும் செய்துத்தரல. இப்ப போன மக்கள் திரும்ப வரணும் என்கிறதுக்காக தண்ணீர் தொட்டி, அடிபம்பு, தெருவிளக்கு வசதிகள் செஞ்சு கொடுத்துருக்காங்க. இதை முன்னாடியே செஞ்சிருந்தா மக்கள் யாரும் ஊரை விட்டு போயிருக்க மாட்டாங்க. இப்ப எல்லாரும் அங்கயும் இங்கயுமா செட்டிலான பிறகு மறுபடியும் எப்படி வருவாங்க? நிறைய வீடுகள் இடிஞ்சு போயிருச்சு. எஞ்சியிருக்கிற கொஞ்ச வீடுகளும் இடிந்து விழுற நிலையில்தான் இருக்குது.

அடிப்படை வசதிகள் செஞ்சு கொடுத்திருந்தாலும் வாழ்வாதரத்துக்கு வழி வேணுமே. அதுக்கு என்ன பண்ணுவாங்க மக்கள்? நான் இப்ப இங்க கொஞ்சம் பன்னிகளை மேய்ச்சு அதுல கிடைக்கிற வருமானத்தை வைச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்கேன். என் மனைவி வீரலட்சுமி 15 வருஷத்துக்கு முன்னாடி இறந்து போயிட்டாங்க. ரெண்டு மகன்கள், ரெண்டு மகள்கள். அதுல ஒரு மகன் மட்டும் அப்பப்போ செலவுக்கு பணம் கொடுத்து உதவுறான்.

எனக்கு இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லை. வேற எங்கேயும் போக வழியும் இல்லை. நான் சாகுறதுக்குள்ள போன மக்களில் கொஞ்சம் பேராவது இங்க மீண்டும் குடிபெயர்றத பார்க்கணும். அதைதான் சாமிக்கிட்ட தினந்தினம் வேண்டியிட்டு இருக்கேன்’’ என்று கூறும் கந்தசாமியின் குரலில் குடும்ப வெறுமையும், ஊரின் வெறுமையும் அமிழ்ந்திருக்கிறது.

இது மீனாட்சிபுரத்தின் கண்ணீர் கதை மட்டுமல்ல, கடைசி கதையும்கூட. கந்தசாமி இருக்கும்வரை மீனாட்சிபுரம் இருக்கும். மீனாட்சிபுரம் எப்போது வரை இருக்கும் என்பது அரசின் கையில்தான் உள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கிராமப்புறத்துக்கும் அரசு கொடுக்க வேண்டும். தவறினால் இப்படி பல ‘மீனாட்சிபுரங்கள்’ தொலைந்துபோகும். விழிக்குமா அரசு?

நன்றி: ‘புதிய தலைமுறை’ வார இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here