வங்கக் கடலில் உருவானது ‘புரெவி’ புயல்

774
Puravi Cyclone
Puravi Cyclone

இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மாலை 5.30 மணி அளவில் புயலாக மாறியது.

அதற்கு ‘புரெவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயலாக வலுப்பெற்றுள்ள புரெவி மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை அல்லது இரவில் இலங்கையைக் கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.

3-ம் தேதி இது மேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடாவில் குமரிக்கடல் பகுதியில் நிலைகொள்ளும். டிச.4-ம் தேதி அதிகாலை குமரி – பாம்பன் இடையே தென்தமிழக கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அப்போது காற்று 65 முதல் 70 கி.மீ. வேகத்தில் சமயங்களில் 85 கி.மீ வேகத்தில் வீசும்.

இதன் காரணமாக டிச.2 அன்று தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.

புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.3 (காலை முதல் இரவு வரை) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.

சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்ட மக்கள் அவசியமான காரணமின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் இன்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நன்றி: தி இந்து தமிழ் திசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here