தென்காசியில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்!

தென்காசி நகரில் இதுவரை விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 950 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் பரவாமல் தடுக்க பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. தகுந்த காரணமின்றி தேவையில்லாமல் வீட்டைவிட்டு பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வர வேண்டும். அவ்வாறு வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளிவிட்டு இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை அலுவலர்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தென்காசி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா தலைமையில் சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் கைலாச சுந்தரம், சிவா, மாரிமுத்து, கணேசன், நகரமைப்பு அலுவலர் பொன்னுச்சாமி, நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர், வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தென்காசியில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஊரடங்கு நேரத்தில் கடைகளை திறந்திருந்தவர்கள், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அரசு விதித்த விதிமுறைகளை மீறி அதிகமான ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கடைகளில் அனுமதித்தல், சாலைகளில் முககவசம் அணியாமல் வந்தவர்கள் போன்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தென்காசி நகரில் இதுவரை விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 950 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here