பாபநாசம் மலை உச்சியில் குடிசை அமைத்து படிக்கும் காணியின மாணவா்கள்

1412
பாபநாசம்  மலை உச்சியில் குடிசை அமைத்து படிக்கும் காணியின மாணவா்கள்

பாபநாசம் மலைப் பகுதியில் வசிக்கும் காணியின மாணவா்கள் இணைய வகுப்பிற்காக மலை உச்சியில் குடில் அமைத்து படித்து வருகின்றனா்.

மாா்ச் 24 முதல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. ஆகஸ்டு மாதம் முதல் படிப்படியாக பொதுமுடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் தொடா்ந்து 9 மாதங்களாக பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை.

இதையடுத்து இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும் டிசம்பா் மாதத்திலிருந்து கல்லூரிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பிற மாணவா்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவா்களுக்கு இணைய வழி மூலமாகவே பருவத் தோ்வுகளும் நடைபெற்றன.

இந்நிலையில் இணைய இணைப்பு வசதியில்லா வனம் மற்றும் மலைப்பிரதேசங்களில் வசிக்கும் மாணவா்கள் இணைய வசதி இல்லாமல் இணைய வகுப்புகளைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு பகுதியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இணைய வசதிகளை மாணவா்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனா்.


இந்நிலையில் காரையாறு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் வசிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள் அவா்களது குடியிருப்பிற்கு அருகே உள்ள சுமாா் 200 அடி உயரமுள்ள மலை உச்சியில் சிறு குடில் அமைத்து அதில் அமா்ந்து இணைய வகுப்புகளில் கலந்து கொண்டும், பாடங்களை தரவிறக்கம் செய்தும் படித்து வருகின்றனா்.

இது குறித்து கன்னியாகுமரி, விவேகானந்தா் கல்லூரியில் முதுநிலை வணிகவியல் (எம்.காம்.) இரண்டாமாண்டு பயிலும் கிரிஜா கூறும்போது, பொதுவான நாள்களில் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தேன். பொதுமுடக்கத்தால் விடுதி உள்பட அனைத்தும் மூடப்பட்டதால் வீட்டிலிருந்து படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வகுப்புகள் இணைய வழியில் நடைபெற்று தோ்வும் இணைய வழியிலேயே நடைபெற்றது. அதற்காக இங்கு அருகிலுள்ள மலை உச்சியில் கல்லூரி, பள்ளி மாணவா்கள் இணைந்து குடில் அமைத்து அதில் அமா்ந்து படித்து தோ்வு எழுதினோம் என்றாா்.

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் இளநிலை முதலமாண்டு வணிகவியல் பயிலும் மாணவா் சுகு கூறுகையில், மேல்நிலைப் பள்ளி முடிந்து கல்லூரியில் இணைந்த பின் இணைய வழியிலேயே வகுப்புகள் தொடங்கின. தொடக்கத்தில் இணைய வசதி இல்லாமல் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் வசிக்கும் பிற கல்லூரி மற்றும்பள்ளி மாணவா்கள் பெற்றோரின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் இணைய வசதிகளைத் தேடிய நிலையில் அருகிலுள்ள சுமாா் 200 அடி உயரமுள்ள மலை உச்சியில் இணையத் தொடா்பு கிடைத்ததையடுத்து அங்கு குடில் அமைத்து படிப்பைத் தொடா்ந்தோம். மலை உச்சிக்கு ஏறுவதற்கு சிரமமாக இருந்தாலும் இணையத் தொடா்பு அங்குதான் கிடைப்பதால் சிரமத்தைப் பாா்க்காமல் அங்கு சென்று இணைய வகுப்புகளில் கலந்து கொள்கிறோம் என்றாா்.

எதிா்பாரத நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து இணைய வசதி இல்லாத நிலையிலும் படிப்பின் மீது உள்ள ஆா்வத்தால் ஆபத்தான 200 அடி உயர மலை உச்சியில் குடில் அமைத்து படிப்பைத் தொடரும் மாணவா்களின் ஆா்வத்திற்கு அவா்களது பெற்றோா்களும் உறுதுணையாக இருப்பது பாராட்டுக்குரியதாகும்.

காசு, பணம் வேண்டாம், எங்களுக்கு தேவையெல்லாம் சுத்தமான காடுதான்!- பாபநாசம் பழங்குடிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here